img

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் குருக்குபுரம், பாரக்கல்புதூரில் எழுந்தருளியுள்ள   இராசிபுரம் நாடு விழியன்குல கொங்கு நாட்டு கவுண்டர்கள் குடிபாட்டு மக்களுக்கு மட்டுமே பாத்தியப்பட்ட குலதெய்வம்

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் குருக்குபுரம், பாரக்கல்புதூரில் எழுந்தருளியுள்ள   இராசிபுரம் நாடு விழியன்குல கொங்கு நாட்டு கவுண்டர்கள் குடிபாட்டு மக்களுக்கு மட்டுமே பாத்தியப்பட்ட குலதெய்வம்

img
img
தெய்வவரலாறு
அருள்மிகு அத்தனூர் அம்மன் துணை (பத்ரகாளி அம்மன்) பாரக்கல்புதூர்
இராசிபுரம் நாடு விழியன் குல கொங்கு நாட்டு கவுண்டர்களின் குலக்கோவில்

ஆதியில் விழியன் குலத்தார் காங்கேய நாட்டில் "பரஞ்சேர்வழி' என்ற ஊரில் காணி பெற்று வாழ்ந்துள்ளனர். அவ்வூரில் உள்ள கரிய காளியம்மன் அவர்களுடைய குல தெய்வமாகும். அக்கோவில் விழியன் குலத்தாருடைய குதிரை உள்ளது. பின்னர் இராசிபுரம் பகுதியில் குடியேறினர். அத்தனூரில் சிறிய கோவில் கட்டி வழிபட்டு வந்தனர்.1331 ஆம் ஆண்டு அவ்விடத்தில் பெரிய புதிய குலக் கோவில் கட்டினர். அந்தகோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்து கொடுக்கும்படி குல குருவிற்கு எழுதிய ஓலையில் இராசிபுரம் விழியன் குலம் நாட்டு ரங்கப்ப கவுண்டர், ஆலந்தார் வேலப்பக்கவுண்டர் குமாரர் கைலாசக் கவுண்டர் ஆகியவர்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் வைகாசி மாதம் 15 ஆம் நாள் நடைபெற்றது. அம்மனின் பெயர் "பத்ரகாளி" என்பதாகும். வழக்தில் "அத்தனூர் அம்மன்" என்றே பொதுவாக அழைக்கப்பட்டது.

அத்தனூர் அம்மன் கோவில் மோடமங்கலம், சித்தளந்தூர், இலுப்புளி, கருமாபுரம், வட்டூர், கூத்தாநத்தம், கூடலூர், இரணாபுரம், பாலமேடு, எழுமாத்தூர், பிடாரியூர், காகம், கோயம்புத்தூரில் கணபதி ஆகிய ஊர்களில் உள்ளன. அம்மன் கருவறையில் எப்பொழுதும் அணையாத "நந்தா விளக்கு" எரிந்து கொண்டிருக்கும். கொடிக் கம்பத்திற்கு அருகில் பாச்சலூரான், செண்பகராயன், துலுக்கண்ணன், ஆலத்தூரான் ஆகியோருடைய குதிரைகள் நான்கு அம்மனை நோக்கியுள்ளன. அம்மன் கோவிலில் அம்மன் வடக்கு நோக்கி அமர்ந்துள்ளது. கோவில் வடக்கு வாயில் கிழபுறம் அத்தாயி கோவில் உள்ளது. விழியன் குலத்தில் பிறந்து திருமணம் செய்து கொள்ளமால் அம்மனுக்கு இறைபணி செய்த பெண்மணியின் பெயரே "அத்தாயி"ஆகும். அத்தனூர் அம்மன் கோவிலின் வடக்கு வாசலுக்கு எதிரில் முத்தி அடைந்தார் பின்னர் அத்தனூர் அம்மன் கோவிலுக்கு வெளியே வடக்கு வாயிலுக்கு வலதுபுரம் தனியாக அத்தாயிக்கு ஆலயம் விழியன் குலத்தரால் கட்டபட்டது. இவருடைய கோவில் முன்தான் தேர்த்திருவிழாவின் போது 3 எருமை கிடா வடக்கு வாசலுக்கு எதிரில் பத்ரகாளியம்மனுக்கு பலியிடப்பட்டு தேர் நிலைநிறுத்தப்படும்.

அத்தனூர் அம்மன் தேர்த் திருவிழா பங்குனி உத்திரத்திற்கு பிறகு வரும் ரேவதி நட்சத்திரத்தன்று நடைபெறும். தேர்த் திருவிழாவின் பொழுது இராசிபுரம் நாடு விழியன் குல நாட்டுக் கவுண்டர்கள் மிகுந்த பொருட்செலவில் சிங்க வாகன மண்டபக் கட்டளை சிறப்பாக நடத்துவர்.

அத்தனூர் பத்ரகாளி அம்மன் கோவிலில் தினமும் 3 கால பூசைகள் நடைபெறுகின்றது. முதலியார், சோழிய வேளாளர் ஆகியோர் முறை வைத்து பூசைகள் செய்ய விழியன் குலத்தார் அனுமதி வழங்கி நடைமுறைப்படுத்தினர். அம்மன்கோவிலுக்கு அருகில் ஆதீஸ்வரர் கோயிலும், மலை மீது சஞ்சீவிராய பெருமாள் கோயிலும் உள்ளது.

அம்மன் கோவிலில் நாள்தோறும் நடைபெறும் 3 கால பூசைகளுக்கும், ஆதீஸ்வரர் மற்றும் சஞ்சீவிராய பெருமாள் கோவில்களுக்கும் பூசைக்கு வேண்டிய எல்லாப் பொருட்களையும் இராசிபுரம் நாடு விழியன் குல நாட்டுக் கவுண்டர்கள் கோவில் ஏற்பட்ட நாளிலிருந்து கொடுத்து வருகின்றனர். இராசிபுரம் நாடு விழியன் குலத்தாரில் ஒவ்வொரு குடும்பமும் வருடந்தோறும் 5 வள்ளம் நெல், நந்தா விளக்கிற்கு எண்ணெய்க்கு பணம் ஆகியவற்றைக் கொடுத்து வருகின்றனர். மற்றவர்கள் யாரும் கொடுப்பதில்லை. விழியன் குலத்தார் வீட்டில் எருமை ஆண் கன்று ஈன்றால் பால் மறந்தவுடன் அதை அம்மன்கோவிலுக்கு கொண்டு வந்து விட்டுவிடுவர் அல்லது அதை விற்று அந்தப் பணத்தை கோவில் உண்டியலில் சேர்த்து விடுவர். கோவில் பூசாரிகளுக்குச் சம்பளம் விழியன் குலத்தார் கொடுக்கும் நெல்லும், பணமும் தான்.

தற்பொழுது இராசிபுரம் நாடு விழியன் குல கொங்கு நாட்டுக் கவுண்டர்கள் 4,500 குடும்பங்கள் உள்ளன.

மேற்கோள்: இராசிபுரம் நாடு விழியன் குல கொங்கு நாட்டு கவுண்டர்கள் புத்தக வெளியீடு

© Copyrights 2022. Powered by